செவ்வாய், 31 டிசம்பர், 2019

உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure) அல்லது இரத்தக் கொதிப்பு (Hypertension)


அப்பிள் சிடர் வினீகர்

இயற்கையின் வரப்பிரசாதமான  ஆப்பிள் சிடர் வினிகரில் இருக்கும் நன்மைகள் ஏராளம்.  வினிகர்களின் பயன்பாட்டில் ஆப்பிள் சிடர் வினிகருக்கு தனி இடம் உண்டு. இதில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. தவிர உடலில் இருக்கக் கூடிய சோடியம் மற்றும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதிலுள்ள ரென்னின் (Rennin) என்னும் என்சைம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. தினமும் காலையில் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகரில் தேன் கலந்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குடித்து வந்தால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்

எலுமிச்சை சாறு
தினமும் காலையில் ஒரு க்ளாஸ் நீரில் எலுமிச்சை சாறு சேர்த்துக் குடித்து வர உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படும் என்கிறார்கள் உலகெங்கிலும் உள்ள ஆரோக்கிய வல்லுநர்கள். இது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களில் இருந்தும் நச்சுக்களை நீக்குகிறது. ரத்த நாளங்களை மென்மையடைய செய்வதோடு ரத்த அழுத்ததை குறைக்கவும் உதவுகிறது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், உடலுக்குத் தேவையான ஆன்டி ஆக்ஸிடென்ட் கிடைக்கிறது. இதனை தினமும் குடித்து வருவதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

வெந்தயம்
வெந்தயத்தை ஊற வைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம் குறையும். இந்த நீரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனை தினசரி காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் டீ, காபி போன்றவற்றைத் தவிர்த்து இதனைக் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். 

சியா விதைகள்
சியா விதைகளில் ஒமேகா -3 கொழுப்புகள் அதிகம் உள்ளதால் உடலின் ரத்த அழுத்தம் குறைய உதவுகிறது.  இந்த சியா விதைகளை அரை மணி நேரம் ஊறவைத்து அந்த நீரை குடித்து வாருங்கள்.  இதன் பலனை கண்கூடாக ஒரு மாதத்தில் பார்க்கலாம். 

குறைந்த அல்லது கொழுப்பில்லாத பால்
உடலுக்குத் தேவையான பொட்டாசியம் மற்றும் கால்சியம், குறைந்த அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் அதிகம் உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கப் பெரிதும் உதவுகின்றன. முழு கொழுப்புள்ள பாலில் உள்ள பால்மிட்டிக் அமிலம் ரத்த குழாய்களைத் தளர்த்தக்கூடிய சிக்னல்களை தடை செய்வதனால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பது உடலுக்கு நன்மை தரும். மேலும் ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடிய பானத்தை வீட்டிலேயே எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.


------------------------------------------------------------------------------------------

புதினா  இலை  – 1  கப் 
கொத்தமல்லி – 1 கப்
பெரிய நெல்லிக்காய் – 5
தண்ணீர் – 1 கப்

பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கிய பின், எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும்.  பின் வடிக்கட்டி குடித்து வர இரத்த அழுத்தம் குறையும்

------------------------------------------------------------------------------------------

இஞ்சி சாறு 1ஸ்பூன்+ தேன்1ஸ்பூன்+ தண்ணீர் 200மிலி கலந்து காலை மாலை குடியுங்கள்

------------------------------------------------------------------------------------------

பூண்டு

இரத்த அழுத்தம் லேசாக இருக்கக்கூடிய நோயாளிகளுக்கு பூண்டு நல்ல மருந்து. அதிலும் பூண்டிலுள்ள அல்லிசின், உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு கூடுவதற்கு உதவி செய்கிறது. அதன் விளைவாக இரத்த குழாய்களின் தசைகளை ஓய்வெடுக்க வைப்பதால், இதய விரிவாக்கம் மற்றும் இதயச் சுருக்க இரத்த அழுத்தமும் குறைந்து கட்டுப்பாட்டில் இருக்கும்.

கற்பூரவள்ளி

கற்பூரவள்ளி இரத்தக் குழாய்களின் மெல்லிழைவான தசைகளை ஓய்வெடுக்க வைத்து, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். மேலும் இது இதய துடிப்புகளை வலிமைப்படுத்தி, அழுத்தத்தின் வேகத்தை குறைக்க உதவுகிறது.

முருங்கைக்காய்

முருங்கைக்காயில் அதிக அளவு புரதச்சத்து மற்றும் பெருமதிப்பு வாய்ந்த வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் போன்றவை நிறைந்துள்ளது. ஆய்வின் படி முருங்கை செடியின் இலைகளிலிருந்து எடுக்கும் சாற்றால், இதயம் விரியும் போது மற்றும் சுருங்கும் போது ஏற்படும் இரத்த அழுத்தம் குறைய வாய்ப்பு உண்டு என்று கூறுகிறது. இதன் பயனை அடைவதற்கு, முருங்கைக் காயை பருப்பு வகைகளோடு சமைத்து உண்ண வேண்டும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காயும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி இரத்தக் குழாய்களை அகலப்படுத்த முக்கிய பங்கு வகிப்பதால், இரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது என்று நம்பப்படுகிறது.

முள்ளங்கி

இந்திய சமையலறைகளில் பொதுவாக பயன்படுத்தும் காய்கறியில் முள்ளங்கியும் ஒன்று. அப்படிப்பட்ட முள்ளங்கியில் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கின்ற பொருட்கள் இருக்கின்றன. அதுவும் பொட்டாசியம் அதிகமுள்ள முள்ளங்கி இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

எள்

சமீபத்திய ஆய்வின் படி நல்லெண்ணெய் மற்றும் அரிசி தவிட்டு எண்ணெய் கலந்த பண்டங்களை சாப்பிடுவதால், உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் இரத்த அழுத்தம் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் மருந்துகள் சாப்பிடுவதை விட, இதை உபயோகித்தல் இன்னும் நல்ல பலன் கிடைக்கும் என்றும் ஆய்வு சொல்கிறது.

ஆளி விதை

ஆளி விதையில் ஒமேகா -3 கொழுப்பு அமிலம் கொண்டுள்ள லினோலினிக் அமிலத்தின் கூட்டு வளமாக இருக்கிறது. பல ஆய்வுகளின் படி, ஆளி விதை சேர்த்த உணவை உட்கொண்டால், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் குறைந்த அளவிலேயே இருக்கும். மேலும் இரத்த அழுத்தத்தையும் இது குறைக்க உதவும்.

ஏலக்காய்

உயிர் வேதியியல் மற்றும் உயிர் இயற்பியலின் இந்திய குறிப்பேட்டின் ஆய்வறிக்கையின்படி, உயர் இரத்த அழுத்தம் உள்ள 20 நபர்களுக்கு தினமும் 3 கிராம் ஏலக்காய்ப் பொடி கொடுக்கப்பட்டது. மூன்று மாத முடிவில் அனைவருக்கும் பக்க விளைவு எதுவுமின்றி நல்ல ஆரோக்கியத்துடன் தேறினார்கள். மேலும் இரத்த அழுத்தமும் நன்றாக குறைந்து காணப்பட்டது
ஆதாரம் : இயற்கை வைத்தியம்

  • ஒரு மனிதனின் சராசரி ரத்த அழுத்தமானது 120/80 என்ற இரண்டு அளவுகளில் கணக்கிடப்படுகின்றது. முதல் அளவானது அவரது இதயம் எந்த அளவிற்கு தமனிகளில் ரத்தததைத் செலுத்துகின்றது என்பதினையும், இரண்டாவது அளவு தொடரும் துடிப்புகளுக்கிடையே இதயமானது சீராக செயல்படுவதைக் கண்டறியவும் உதவுகின்றது.
  • இந்த அளவானது ஒருவருக்கு 140/90 என்ற அளவு வரை இருக்கலாம். அதனைவிட அதிகரிக்கும்போது பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, இதய நோய் போன்றவை தாக்கக்கூடும் என்று எச்சரிக்கும் மருத்துவர்கள் இத்தகைய நோய்கள் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள உதவும் வழிமுறைகளையும் பட்டியலிட்டுள்ளனர்.
  • ஆண்கள் மது அருந்தும் பழக்கம் உடையவர்களாக இருந்தால் ரத்த அழுத்த நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு அதிகரிக்கின்றது. எனவே, குடிப்பழக்கம் உள்ளவர்கள் மதுவைத் தவிர்ப்பதே சிறந்ததாகும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் புகை பிடிக்கும் பழக்கமும் இந்த நோய் வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாகக் குறிப்பிடும் மருத்துவர்கள் இந்தப் பழக்கத்தை விரைவில் கைவிடுவதே நல்லது என்கின்றனர்.
  • ஒருவர் சாப்பிடும் உணவில் உப்பின் உபயோகமும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவின் சுவையை அதிகரிக்க உப்பு உதவக்கூடும். ஆனால் இதன் அளவு அதிகரிக்கும்போது கொழுப்புப் படிவங்களை தமனிகளில் ஏற்படுத்தி ரத்த அழுத்த அளவை அதிகரிக்கும்
  • மேலும், உடலில் உள்ள நீர் இருப்பை சமன்படுத்தவும், அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்தவும் உதவும் பொட்டாசியம் சத்து தமனிகளில் ரத்த ஓட்டம் சீராக நடைபெறவும் உதவுகின்றது. வாழைப்பழம், உருளைக்கிழங்கு, வெள்ளரி, ஆரஞ்சு, முட்டைக்கோஸ், தக்காளி, காலிபிளவர், கீரை மற்றும் பிரக்கோலி போன்ற உணவுகள் உடலில் பொட்டாசியம் சத்தை அதிகரிக்கக் உதவும்.
  • இதுதவிர ஊட்டச்சத்துகள், மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பழங்களும், காய்கறிகளும் தேவையான அளவு உணவில் சேர்த்துக் கொள்ளப்படுவதே ஆரோக்கியமான வாழ்விற்கு வழி வகுக்கும்
தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள், புரதம் நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள், நட்ஸ் மற்றும் சிறுதானிய உணவு வகைகள் ஆகியவற்றை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக அவகேடோ,  பொட்டாசியம் நிறைந்த புரோக்கோலி, வாழைப்பழங்களைச் சாப்பிடுவதால் ரத்தஅழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.   

லாஃப்டர் தெரப்பி
மனதைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு மேலை நாடுகளில் 'லாஃப்டர் தெரப்பி'  மூலம் சிகிச்சை அளிக்கிறார்கள்.  இப்போது நம் ஊர்களிலும் இது பிரபலமடையத் தொடங்கிவிட்டது. காலையில் வாக்கிங் முடித்து, பலர் ஒரே இடத்தில் கூடி, சிரித்து தங்கள் மனஅழுத்தத்தைப் போக்கிக்கொள்ளலாம். லாஃப்டர் தெரப்பியோடு, வீட்டில் பிடித்த நகைச்சுவைக் காட்சிகளை கண்டு களிப்பது, புத்தகம் படிப்பது,  குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பேசிப் பழகுவது எல்லாம் பலன்களைத் தரும். ஒரு நாளைக்கு 15-20 நிமிடங்கள் வரை இடைவிடாமல் சிரிப்பதால், மனஅழுத்தம் குறைந்து, ரத்த அழுத்தம் சீராகும். சிரிக்கும்போது நமக்குத் தெரியாமலேயே அதிகமாக சுவாசிப்பதுடன், அதிகமான ஆக்ஸிஜனையும் உள்வாங்குகிறோம். இதனால் ரத்த ஒட்டம் அதிகரிக்கிறது. உயர் ரத்த அழுத்தம் உடனடியாகக் குறைகிறது.
------------------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக